தேர்தல் பணியின் போது மன அழுத்தம், என்று ஆசிரியர்கள் குமுறல்!
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர் பட்டியலை, முதலிலேயே பெற்றாலும்,தேர்தல் பணியாணை, தேர்தலுக்கு ஒருநாள் முன் தான் வழங்கப்படுகிறது. தேர்தல் பயிற்சி வழங்கும் முதல் நாளிலேயே அந்தப் பணியிட ஆணையை வழங்குவதற்கு, இன்றைய தொழில் நுட்பத்தில் சாத்தியமில்லையா!
ஒரு ஆசிரியர், தான் பணியாற்றுகிற இடத்திற்கு அருகில் உள்ள ஓட்டுச் சாவடியில் பணியாற்றினால் என்ன நடந்து விடும்? வேட்பாளருக்குச் சாதகமாக செயல்பட்டுவிடுவாரா? நம்பிக்கையில்லாதவரை அப்பணிக்கு ஏன் அமர்த்த வேண்டும்? நம்பிக்கையான வேறு பணியாளரை பயன்படுத்திக் கொள்ளலாமே!
ஏஜன்ட்கள் கண் கொத்திப் பாம்பாய் இருக்கிறார்கள். மேலும், எல்லா ஓட்டு சாவடியிலும் கண்காணிப்புக் கேமராக்களோடு கல்லுாரி மாணவர்கள் உள்ளனர். எங்கே தவறு ஏற்படும்?
ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகள், சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் பாலுாட்டும் தாய்மார்கள் என யாருமே இல்லையா. அவர்களை முன்னரே கண்டறிந்து தேர்தல் பணியிலிருந்து சற்று விலக்கி வைப்பதில் என்ன பிரச்னை? அவர்களை முதலிலேயே இனம் கண்டு கொள்ளும் வகையில் எந்த நடவடிக்கையும் இல்லை.
பெண் ஆசிரியைகள் பணியாற்ற செல்லும் இடத்திற்கு பயண வசதி இருக்கிறதா! அங்கு அவர்களுக்கு தங்கும் வசதி, அடிப்படைக் கழிப்பிட வசதிதான் இருக்கிறதா!
ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு, உணவுக்கு எந்த ஏற்பாடும் செய்வதில்லை.
தேர்தல் நடத்திய அலுவலர்கள், மண்டல அலுவலர்களை அழைத்து தேர்தலை நடத்துவதில் உள்ள சிரமங்கள் பற்றி கருத்து கேட்டு, அடுத்த தேர்தல்களில் அவற்றைக்களைய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் அப்போதுதான் அறிய முடியும்.
ஓட்டுப் பதிவு முடிந்தும், அந்த ஓட்டுப் பதிவு இயந்திரங்களைப் பெற நள்ளிரவு வரையும் சில இடங்களில் அடுத்த நாளும் ஆகி விடுகிறது. பெண் ஆசிரியைகள் அந்த நள்ளிரவில், தங்கள் வீடுகளுக்கு திரும்ப எந்த வசதியும் இல்லை. அதிகாரிகளுக்கு இது குறித்து அக்கறையும் இல்லை.
Post a Comment