பள்ளி கல்வி துறை கட்டடங்கள் திறப்பு
பள்ளிக் கல்வித்துறை சார்பில், 49.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.
சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், 1.22 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன், 39.90 கோடி ரூபாய் மதிப்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கட்டடம் கட்டப்பட்டுள்ளது.இதில் ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி இயக்குநரகம் மற்றும் கல்வி தொலைக்காட்சி நிலையம் ஆகியவை இதில் செயல்பட உள்ளன.
நபார்டு கடனுதவி
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், கோவை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில், ஐந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 9.70 கோடி ரூபாய் மதிப்பில், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளன.இவற்றை, முதல்வர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ்குமார் பங்கேற்றனர். அத்துடன், பள்ளிக் கல்வி இயக்ககத்தின், அமைச்சுப் பணிக்கு, 635 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Post a Comment