பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள் இன்ஜி., 2ம் ஆண்டில் சேரலாம்
'டிப்ளமா மற்றும் பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்களை, இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டில், அனைத்து பாடப் பிரிவுகளிலும் சேர்க்கலாம்' என, கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்திஉள்ளது.
இது தொடர்பாக, தொழில்நுட்ப பல்கலைகள், மாநில உயர் கல்வித்துறை மற்றும் இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இன்ஜினியரிங் படிப்பு, இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில், டிப்ளமா மற்றும் பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்களை, குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மட்டுமே சேர்ப்பதாகவும், விரும்பும் பாடப்பிரிவுகளில் சேர்ப்பதில்லை என்றும் புகார்கள் வருகின்றன.
ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின் படி, டிப்ளமா முடித்த மாணவர்கள், குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால், அவர்களை, இன்ஜினியரிங் படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கலாம். இன்ஜினியரிங்கில் எந்த பாடப்பிரிவிலும், இரண்டாம் ஆண்டு சேர்க்கை வழங்கலாம். விரும்பும் பாடப்பிரிவில் காலியிடங்கள் இருக்கும் நிலையில், இடம் வழங்க மறுக்கக்கூடாது.
டிப்ளமா தொழிற்கல்வி படித்தவர்களை மட்டும், அவர்களுக்கு பொருத்தமான பாடப்பிரிவில், இரண்டாம் ஆண்டு சேர்க்கை தர வேண்டும்.அதேபோல, பி.எஸ்சி., முடித்தவர்களுக்கும், நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கை வழங்கலாம். அவர்கள், முதலாம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் வரைகலை, இன்ஜினியரிங் ஓவியம் மற்றும் மெக்கானிக்ஸ் போன்றவற்றை, இரண்டாம் ஆண்டில் சேர்த்து படிக்க அனுமதிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment