ஆசிரியர்களுக்கு எதிராக மக்களை ஏவி விடும் பாலிமர் - செய்திக்குழுவை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
பார் போற்றும் பண்பாளர்களையும் , நாட்டுக்கு உழைக்கும் உத்தமத் தலைவர்களையும் , நல்ல அரசியல் தலைவர்களையும் , நாட்டை நிர்வகிக்கும் உத்தம புருஷர்களையும் , நல்ல அறிஞர்களையும் , மேதைகளையும் , விஞ்ஞானிகளையும் , நாட்டைக் காக்கும் நல் வீரர்களையும் உருவாக்கும் அரும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள் . அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் என்பதை நாடே அறியும் . ஏழை எளிய மக்களின் குழந்தைகளின் கல்விக் கண்களை திறந்து வைத்து அவர்களின் செம்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக என்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் . ஆசிரியர்களின் ஊதியம் என்பது , 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய , மாநில அரசுகள் ஊதியக் குழுக்களை ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைத்து , ஆசிரியர்களின் பணிப் பண்புகளை நன்கு அலசி ஆராய்ந்து , பல விவாதங்கள் நடத்தி , பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் ஆசிரியர்களின் ஊதியம் .
* ஆசிரியர்களாகவே தங்களுடைய ஊதியத்தை நினைத்தபொழுதெல்லாம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று உயர்த்திக்கொள்வது இல்லை . சுதந்திர இந்தியாவில் இன்று வரை மொத்தம் 7 முறைதான் ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது . நாட்டின் செல்வாதாரங்களை எல்லாம் சுரண்டி , கொள்ளை அடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள் அல்லர் .
* வங்கிகளில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தில் கோடி கோடியாக கடன் பெற்று , திருப்பிக் கொடுக்காமல் , அரசை ஏமாற்றி வெளி நாடுகளுக்குச் சென்று ராஜபோக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்வர்கள் ஆசிரியர்கள் அல்லர் . இந்திய மக்களிடமிருந்து , தொழிலாளி மக்களிடமிருந்து அவர்களது உழைப்பில் இருந்து சுரண்டப்பட்ட பணத்தில் கோடி கோடியாக வெளிநாட்டு வங்கிகளில் சேமித்து வைத்து , அரசை ஏமாற்றித் திரியும் எத்தர்களின் கூட்டம் அல்ல ஆசிரியர்கள் சமுதாயம் . தங்களின் வருமானத்தைக் குறைத்துக் காட்ட , பொய் கணக்குகளை எழுதி , அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை ஏப்பம் விடும் கூட்டம் அல்ல ஆசிரியர் கூட்டம் .
* இவர்களிடம் குவியல் , குவியலாக குவிந்திருக்கும் மக்களின் பணத்தை எடுத்து அரசின் வருவாயைப் பெருக்கி , அதன் மூலம் , கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க ஆக்கப்பூர்வமான வழிவகைகளை சொல்ல வக்கற்ற பாலிமர் செய்திப் பிரிவு , கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்லாமலேயே ஆசிரியர்கள் ஊதியம் பெறுவது நியாயமா ? என்று மக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பிவிட எத்தனிக்கும் செயல் எவ்வளவு அறிவிளித்தனமானது , கோமாளித்தனமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் .
* இயற்கைச் சீற்றங்கள் இந்தியாவின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் , அதன் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் துயர் துடைக்க தமிழகத்து ஆசிரியர் சமுதாயம் என்றும் தயங்கியதில்லை ; தனது உதவிக்கரங்களை நேசக் கரங்களை நீட்டி அரவணைத்து வந்திருக்கிறது என்ற வரலாறு பாலிமர் நண்பர்களுக்கு தெரிந்திருக்குமா ? இப்பொழுதுகூட கொரோனா - நிவாரண நிதிக்கு தமிழகத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ரூ .100 கோடிக்கு மேல் வழங்கியுள்ளனர் என்பதை பாலிமர் நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம் .
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க வழிவகைகளைக் காணவேண்டுமே தவிர மற்றவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க சதி ஆலோசனைகளை வழங்கக் கூடாது . ஆகவே தனது அளப்பறிய தியாகங்கள் மூலம் , இமய மலை போல் உயர்ந்து நிற்கும் ஆசிரியர் சமுதாயாத்தைப் பார்த்து யார் குரைத்தாலும் , ஊளையிட்டாலும் , அது இமயமலையை ஒருபோதும் சீர்குலைக்க பயன்படாது என்பதை பாலிமர் செய்திப் பிரிவு நண்பர்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோம் . ஆகவே இதுபோன்ற விஷமத்தனமான வேலையையும் , சிண்டு முடியும் வேலையையும் ; திகிடுதத்தம் செய்யும் வேலையையும் மேற்கொண்டு தொடரவேண்டாம் என்று பாலிமர் செய்திக் குழுவை கேட்டுக்கொள்கிறோம் .
இவண் ,
அ.மாயவன்
நிறுவனத் தலைவர் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் .
Post a Comment